×

தேர்தல் பறக்கும்படை சோதனை மேலும் ₹4 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், ஏப்.3: குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் மேலும் ₹4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை வரை மொத்தம் ₹1 கோடி 18 லட்சத்து 30 ஆயிரத்து 427 தேர்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக இதுவரை கன்னியாகுமரியில் ₹18 லட்சத்து 38 ஆயிரத்து 690 மற்றும் 2 ஆயிரம் நோட்டீஸ்கள், நாகர்கோவிலில் ₹37 லட்சத்து 80 ஆயிரத்து 300, குளச்சலில் ₹23 லட்சத்து 11 ஆயிரத்து 717 மற்றும் 6 ஆயிரம் நோட்டீஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பத்மநாபபுரத்தில் ₹7 லட்சத்து 62 ஆயிரத்து 770 மற்றும் ₹1.40 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் ₹19 லட்சத்து 29 ஆயிரத்து 550, கிள்ளியூரில் ₹12 லட்சத்து 7 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நேற்று காலை வரை ஒரே நாளில் மட்டும் நாகர்கோவிலில் ₹1 லட்சத்து 25 ஆயிரம், குளச்சலில் ₹ 2 லட்சத்து 75 ஆயிரத்து 500ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் ₹4 லட்சத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தேர்தல் பறக்கும்படை சோதனை மேலும் ₹4 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Election Air Force ,Nagercoil ,Kumari district ,Kanyakumari Lok Sabha ,Vilavankode ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் டெப்போ முன் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்